காரைக்கால் : வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் காரைக்கால் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று மாலை ஏற்றப்பட்டுள்ளது.
நிகழ்மாதம் 20-ஆம் தேதி வாக்கில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தது. ஆனால் பருவமழை மேலும் தாமதமாகும் என தற்போது வானிலை ஆய்வு மையம் கருத்து வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், காரைக்கால் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் வெயிலின்றி ஆங்காங்கே லேசான மழைத் தூறல் மட்டும் இருந்தது.
இந்த நிலையில், மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டது. இது அடுத்த 2 நாள்களில் மேலும் வலுவடையும் வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியது.
இதையொட்டி காரைக்கால் மார்க் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டதாக துறைமுக பொதுமேலாளர் ராஜேஷ்வர்ரெட்டி தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை தொடக்கமாக நிலையாக இதனை கருதலாம் எனவும், காரைக்கால் மாவட்டத்தில் பருவமழையை சந்திக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த அரசு நிர்வாகம் ஈடுபடவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.