கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் ஜி.சசிக்குமார் (36). கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர். இவர் கடந்த 22-ம் தேதி இரவு 10.30 மணிக்கு கோவை ராம்நகரில் உள்ள இந்துத்வா நிர்வாகிகள் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு வீட்டிற்கு திரும்பும் வழியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதனையடுத்து கோவையில் பெரும் கலவரம் வெடித்தது. தற்போது அங்கு மெல்ல மெள்ள இயல்பு நிலை திரும்பி வருகின்ற நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவு விபரம் வருமாறு:
கோவை சசிகுமார் கொலை வழக்கை விசாரித்து வரும் மாவட்ட கண்காணிப்பாளர் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகள் வசம் உடனடியாக ஒப்படைக்குமாறு உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்குக்கான விசாரணை அதிகாரியை நியமிக்குமாறு ஏடிஜிபி கேட்டுக் கொள்ளப்படுகிறார். இந்த தகவலின் நகல் மேற்கு மண்டல் ஐ.ஜி.,க்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.