சென்னை: நெடுஞ்சாலை மைல் கற்களில் ஹிந்தியில் பெயர் எழுதும் விவகாரத்தில் திமுகவினர் முகத்தில்தான் கருப்பு மை பூச வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று தில்லி செல்லும் வழியில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது.
தமிழகம் முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் அனைவரும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் சொல்லா விட்டாலும் விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் வழங்குவதில் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாக உள்ளது.
நெடுஞ்சாலை மைல் கற்களில் ஹிந்தியில் பெயர் எழுதும் விவகாரத்தில், அவ்வாறு எழுதவேண்டும் என்று உத்தரவிட்டதே திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி .ஆர்.பாலுதான். எனவே நெடுஞ்சாலை மைல் கற்களில் மை பூசி அழிப்பவர்கள் அதற்கு பதிலாக, திமுகவினர் முகத்தில்தான் கருப்பு மை பூச வேண்டும்.
தற்பொழுது ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அதனை உடனே தடுத்து நிறுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.