புதுதில்லி: தில்லியில் பிரதமர் தங்களை சந்திக்காத காரணத்தால், அவரது அலுவலகம் முன்பாக நிர்வாணப் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
வறட்சி நிவாரணம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் அமைப்பானது தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த நான்கு வாரங்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டமானது இன்று 28-ஆவது நாளை எட்டியிருக்கிறது.
இன்று அவர்கள் பிரதமர் அலுவலகம் சென்று பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என்றும் அதற்கு தில்லி காவல்துறை மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி பிரதமர் அவர்களை சந்திக்கவில்லை. அதற்குப் பதிலாக வேறு ஒரு அதிகாரியிடம் மனு கொடுத்துவிட்டு செல்லுமாறு அவர்களிடம் கூறப்பட்டது.
இதனால் கடும் அதிருப்திக்கு ஏமாற்றத்திற்கும் ஆளான விவசாயிகளில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட நால்வர் 'திடீர் ' என்று தங்களது ஆடைகளை களைந்து விட்டு, முழு நிர்வாணமாக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் அங்கிருந்த அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர் அவர்களை விரைந்து வந்து கைது செய்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.