சென்னை: சென்னை அண்ணாசாலையில் மீண்டும் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அண்ணாசாலையில் உள்ள ஜெமினி பாலம் அருகில் பெரிய அளவில் பள்ளம் உருவாகி காரும், அரசுப் பேருந்தும் சிக்கிக் கொண்டன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் விரிசல் உருவாகியுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கெனவே ஞாயிற்றுக் கிழமையன்று அண்ணா சாலையில் உள்ள ஜெமினி பாலம் அருகில் திடீரென பெரிய அளவில் பள்ளம் உருவானது. இந்தப் பள்ளத்தில் ஒரு காரும், அரசுப் பேருந்தும் சிக்கிக் கொண்டன. இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. மெட்ரோ ரயில் பணியின் காரணமாக பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த பள்ளத்திற்கு அருகிலேயே மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் ஏற்பட்ட பகுதியை சுற்றி மக்கள் செல்லாத வகையில் காவல்துறையினர் தடையை அமைத்துள்ளனர். மேலும் போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் மிக முக்கிய சாலையான அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விரிசல் ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். ஒரு மணி நேரத்தில் விரிசல் சரி செய்யப்படும். விரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.