புதுதில்லி: புதுதில்லியில் கடந்த 28 நாட்களுக்கும் மேலாக போராட்டடத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளைச் சந்தித்த தேமுதிக மகளிர் அணித் தலைவியான பிரேமலதா விஜயகாந்த், விவசாயிகளுடன் மண்சோறு சாப்பிட்டார்.
வறட்சி நிவாரணம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் கடந்த 28 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்களில் சிலர் தங்களை சந்திக்க மறுத்த பிரதமர் மோடியைக் கண்டித்து, முழு நிர்வாண போராட்டடத்தில் கூட ஈடுபட்டனர். இது தமிழகம் முழுவது அதிர்ச்சியலைகளை உஉண்டாக்கியது.
இந்நிலையில் தேமுதிக மகளிர் அணி தலைவியான பிரேமலதா விஜயகாந்த் இன்று தில்லியில் போராட்டடத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.மேலும் அவர் விவசாயிகளுடன் அமர்ந்து அவர் மண்சோறு சாப்பிட்டார். அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
விவசாயிகள் தங்கள் நியாயமான உணர்வுகளை தெரியப்படுத்தவே போராட்டம் நடத்துகின்றனர். அவர்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணபபட வேண்டும். பிரதமர் அனைவருக்கும் பொதுவானவர். அவர் இந்த பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காண உதவ வேண்டும். நேற்று நடந்த நிர்வாண போராட்டமானது நிச்சயமாக தமிழர்களுக்கு தலைகுனிவுதான். இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு ஏற்பட வேண்டும்.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. சரியான நிர்வாகம் இல்லை தமிழகத்தில் உள்ள அணைகள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. அவைகளைத் தூர்வார இதுவே சரியான தருணம். நாட்டில் விவசாயம் இல்லாவிட்டால் வளர்ச்சி எப்படி ஏற்படும்? எனவே விவசாயிகளின் பிரச்சினைங்களை தீர்க்க மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.