அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம்: மு.க. ஸ்டாலின்

அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகளின் நலன் காக்கவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம்: மு.க. ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகளின் நலன் காக்கவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழக விவசாயிகளின் நலன் கருதியே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக காவிரி, முல்லைப் பெரியாறிலிருந்து இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமை மறுக்கப்படுகிறது. சிறுவாணியிலிருந்து வரக்கூடிய நீர் தடுக்கப்பட்டு இன்றைக்கு தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. பாலாற்றிலிருந்து வரக்கூடிய நீரை தடுக்க தடுப்பணைகள் கட்டப்படுகின்றன, மேக்கேதாட்டு அணை கட்டப்படுவது என்று தமிழகத்தின் உரிமைகள் எல்லாம் பக்கத்து மாநிலங்களிடம் அடகு வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டிய, இவற்றை தடுத்து நிறுத்த வேண்டிய மாநில அரசும், மத்திய அரசும் இவற்றை பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படவில்லை.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடினார்கள், தொடர்ந்து போராடக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. தில்லியில் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
ஆனால், இதுகுறித்து தமிழகத்தில் இருக்கக்கூடிய முதல்வரோ, தில்லியில் இருக்கக்கூடிய பிரதமரோ விவசாயிகளைச் சந்தித்துப் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காணவோ அல்லது அழைத்து பேசவோ கூட இயலாத நிலை இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. நமக்கு மட்டுமல்ல, இந்த உணர்வு இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் வந்திருக்கிறது. இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. கட்சிக்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு, விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவே இந்தக் கூட்டம்.
இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதில் முக்கியமாக விவசாயிகளின் பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய வகையில், மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை வரும் 25-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தத் தீர்மானங்கள் அனைத்தையும் மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் வரும் 22-ஆம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com