வருமான வரித் துறை சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அதிமுகவின் இரு அணியினர் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வருமானவரித் துறை சோதனையும், அதிமுகவுக்குள் குழப்பமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு கைகோத்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதிமுகவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அரிதாரம் பூசி அரங்கேறும் நாடகங்கள் இதைத் தான் உலகத்துக்கு வெளிப்படுத்துகின்றன.
சேகர் ரெட்டியைத் தாண்டி...சேகர் ரெட்டி மட்டும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுகிறார். ஆனால், சேகர் ரெட்டியைத் தாண்டி விசாரணை அடுத்தகட்டமாக உள்ள அதிமுக அமைச்சர்கள் பக்கமோ, மணல் கொள்ளைக்கு துணை நின்றவர்கள் பக்கமோ செல்வதற்குச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதா என்ற நியாயமான கேள்வி எழுந்துள்ளது.
நடவடிக்கை தேவை: தற்போது இரு அணியாக இருப்பவர்கள்தான் இணைய உள்ளனர். அதிமுகவின் இரு அணியினருமே ஜெயலலிதாவின் மரணத்தில் நியாயம் கிடைக்கப் போராடுகிறோம்; தர்ம யுத்தம் நடத்துகிறோம் என்றெல்லாம் பகட்டாகப் பேசுவது பகல் வேஷம்.
எனவே, வருமானவரித் துறை சோதனைகள் அனைத்திலும் கண்டறியப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இரு அணிகளிலும் உள்ள அதிமுக அமைச்சர்கள் மீதும், அவர்களின் ஊழல்களுக்கு துணை போன அதிகாரிகள் மீதும், முதல்வர் மீதும் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான மேல் நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
மேலும், இந்த விவகாரத்தில் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட மத்திய அரசு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.