சென்னை: அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சிலர் நடந்து கொள்கிறார்கள் என்று ஓபிஎஸ் அணி மீது அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் வைத்திலிங்கம் புகார் தெரிவித்துள்ளார்.
அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்பாக குழப்பமான சூழல் நிலவி வரும் வேளையில் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் வைத்திலிங்கம், அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தனக்கு பிறகும் இந்த இயக்கம் நூறு ஆண்டுகள் நிலைத்து வாழ வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் விருப்பம். அதற்காகவே தற்பொழுது நிலவி வரும் சிக்கலை தீர்த்து கட்சியையும் சின்னத்தையும் அடைய முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
அதற்காகத்தான் பிரிந்து சென்றவர்களுக்கு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.எல்லா விதமான பிரச்சினைகளுக்கும் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்வு காணலாம்.
ஆனால் தற்பொழுது அந்த அணியின் கே.பி.முனுசாமி பேசியுள்ளது இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அமைந்துள்ளது. இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும்.
ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை கேட்கிறார்கள். அதைபன்னீர்செல்வம் முதல்வராக இருந்த பொழுது அவரே செய்திருக்க முடியுமே?
இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.