சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் தற்பொழுது மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருவதால், அதிமுக இரு அணிகளின் இணைப்பு அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியாகும் என்று தெரிகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக இரு அணிகளின் இணைப்பு தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் இன்று இரு தரப்பிலும் சூடு பிடித்தன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் இன்று மாலை மாலை ஆலோசனை நடத்தினார்.
அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனது அணியினருடன் அவரது இல்லத்தில் தொடர் ஆலோசனைகளை நடத்தி வந்தார்.
முன்னதாக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகிய இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சந்தித்து முக்கிய ஆலோசனைக நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் தற்பொழுது பொதுப்பணித்துறையின் சார்பில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியஇருவரும் அங்கு வர உள்ளதாகத் தெரிகிறது.
எனவே அதிமுக இரு அணிகளின் இணைப்பு அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியாகும் என்று தெரிகிறது.
அதன் பிறகு இருவரும் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களை சந்திப்பார்களென்று எதிர்பார்க்கப்படுகிறது.