சென்னை: அதிமுக தோழமைக் கட்சி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ், தமிமுன், தனியரசு சென்னையில் இன்று தங்களின் நிலைப்பாடு குறித்து கூட்டாகப் பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிமுன் அன்சாரி: அதிமுகவை பிளவுபடுத்தி அழிக்கும் வேலையை பாஜக செய்துவருவதாக குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது என்று கூறினார்.
தனியரசு: பேரறிவாளனுக்கு பரோல் வழங்கிய முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த தனியரசு, தினகரனை அழைத்து முதல்வர் பழனிசாமி பேச வேண்டும். அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் அமைச்சரவையில், கட்சியில் இடமளிக்க வேண்டும். பாஜகவின் அழுத்தத்திற்கும், சூழ்ச்சிக்கும் அதிமுக இரையாகி விடக்கூடாது என்றும் சசிகலாவை நீக்கும் பாஜக செய்யும் சூழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி இரையாகக் கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நிலைமை கருதி முடிவெடுப்போம். என்று தனியரசு கூறியுள்ளார்.
கருணாஸ்: ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் என்று தெரிவித்த கருணாஸ், ஓ.பி.எஸ் அணியை அழைத்துக் கொண்ட எடப்பாடி அரசு, தினகரன் தரப்பை நீக்குவது சரியான முடிவு அல்ல. சசிகலா, தினகரனை நீக்குவது என்பது சரியான முடிவல்ல என்று தெரிவித்தார்.
மேலும், பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகி விடக்கூடாது. விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதை உணர்ந்து தினகரன் அணியினருடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பன்னீர்செல்வத்துக்கு கொடுத்த மரியாதையை தினகரனுக்கும் அளிக்க வேண்டும். பொதுச்செயலாளரான சசிகலாவை நீக்கிடும் முடிவு பின்னடைவை ஏற்படுத்திடும். மத்திய அரசின் சூழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி அரசு இடம் அளித்துவிடக் கூடாது என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.