சென்னை: துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் இளங்கோவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிணைத் தொடர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அதிமுக இரு அணிகளின் இணைப்பினைத் தொடர்ந்து தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதல்வர் பதவிக்கு நாம் ஒருவரை நியமனம் செய்யலாம். ஆனால் அவ்வாறு நியமிக்கப்படுபவருக்கு துணை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது. அவ்வாறு செய்வது அரசியல் சாசன முறைகளுக்கு எதிரானதாகும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.