

மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் நிவாரண நிதியும், அவரது சகோதரருக்கு அரசுப் பணிக்கான உத்தரவையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வை எதிர்த்து கடந்த செப்டம்பர் 1 -ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அப்போது, 'அனிதாவின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.7 லட்சமும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும்' என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் அனிதாவின் குடும்பத்தினர் வியாழக்கிழமை சந்தித்தனர். அப்போது, அனிதாவின் தந்தை சண்முகத்திடம் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.
சகோதரருக்கு அரசு வேலை: அனிதாவின் சகோதரர் சதீஷ்குமாருக்கு சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தில் (டாம்ப்கால்) இளநிலை உதவியாளராகப் பணியமர்த்தி, அதற்கான பணி நியமன உத்தரவையும் முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத் தலைவர் (பொறுப்பு) மோகன் பியாரே, பொது மேலாளர் இந்துமதி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத், உடையார்பாளையம் வருவாய் கோட்ட அலுவலர் பி. டினாகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.