பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானங்களை விற்பது தொடர்பாக தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரதாப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்குப் பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாணையை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் விற்பனைக்குப் பிறகு, மீண்டும் சுத்தம் செய்யப்பட்ட பாட்டில்கள் மதுபான ஆலைகளுக்கு வழங்கப்படுவதால் எந்தவிதமான சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இல்லை. ஆனால், பிளாஸ்டிக் பாட்டில்கள் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிப்பதோடு, மறுசுழற்சியும் செய்ய முடியாது. இந்தச் சூழலில் 1996 ஆம் ஆண்டு அரசாணையை நிறைவேற்ற தமிழக அரசு இப்போது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.