

நாமக்கல் மாவட்டத்தில், கிலோ ரூ. 2-க்குக் கூட வாங்கிக் கொள்ள யாரும் முன்வராமல் ஏறத்தாழ 1 லட்சம் மூட்டை சின்ன வெங்காயம் பட்டறையிலேயே வீணாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமபட்டி வட்டாரத்தில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஜூன் மாதம் நடவு செய்யப்படும் வெங்காயத்தில் கிடைக்கும் மகசூலில் சமையலுக்கு பெரிய காய்களை விற்பனை செய்து வருகின்றனர். சிறிய காய்களை விதைக்கு விற்பனை செய்ய நிலத்திலேயே பட்டறை போட்டு பாதுகாத்து வைத்திருந்து, டிசம்பர் மாத நடவுக்கு விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டை வரை மகசூல் கிடைக்கும். இதில் 20 மூட்டை பெரிய காய் இருக்கும். அறுவடையின்போதே இந்தக் காய்கள் விற்பனை செய்யப்பட்டு விடும். இதன் மூலம் சாகுபடி செலவில் பாதி பணம் விவசாயிகளுக்கு கிடைத்து விடுகிறது. மீதி உள்ள 30 மூட்டை காய்களை 3 மாதம் பாதுகாத்து வைத்திருந்து விதைக்கு விற்பனை செய்யும்போது, கிலோ ரூ.20 வரைக்கும் விற்பனையாகும். இதன் மூலம் விவசாயிகளுக்கு சாகுபடி செலவு போக ஏக்கருக்கு ரூ.10,000 வரை லாபம் கிடைக்கும்.
ஆனால், நிகழாண்டில் விதை வெங்காயம் கொள்முதல் செய்ய வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. இதனால், எருமபட்டி பகுதியில் ஏறத்தாழ 1 லட்சம் மூட்டை அளவுக்கு விதை வெங்காயம் பட்டறையிலேயே வீணாகிவிடும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் பவித்திரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி டி.நல்லையன் கூறியது:
நூறு நாள் பயிரான சின்ன வெங்காயம் நடவு, நாற்று நடவு என 2 முறைகளில் பயிரிடப்பட்டு வருகிறது. எருமபட்டி வட்டாரத்தில் 25,000 ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.
இப்பகுதியில் விளையும் சின்ன வெங்காயம் சென்னை, திருச்சி, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை, சமையலுக்குப் பயன்படும் சின்ன வெங்காயம் (பெரிய காய்) கிலோ ரூ. 35 வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர், அதன் விலை படிப்படியாகக் குறைந்து, தற்போது கிலோ ரூ.10 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
அதே சமயத்தில், கடந்த செப்டம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு, விதைக் காய்களுக்காக பட்டறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை இப்போது கிலோ ரூ.2-க்கு வாங்கிக் கொள்ள கூட வியாபாரிகள் முன்வரவில்லை.
நவம்பர் மாதத்தில் மழை பெய்தால், டிசம்பர் மாதத்தில் நடவு தொடங்கும். அப்போது கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விலை கிடைக்கும். ஆனால், இப்போது இந்த வெங்காயம் முழுமையாக வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சமையல் தேவைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் முன்வந்தாலும், கிலோ ரூ.2-க்குக் கூட வாங்கிக் கொள்ள வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. இதனால் எருமபட்டி வட்டாரத்தில் சுமார் 1 லட்சம் மூட்டை அளவுக்கு சின்ன வெங்காயம் வீணாகி வருகிறது.
இப்போது வெளிச்சந்தையில் சின்ன வெங்காயம் (பெரிய காய்) கிலோ ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை நேரடியாக விவசாயிகளிடம் விதைக் காய்களை ரூ.10-க்கு குறையாமல் கொள்முதல் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு மகசூல் செலவு தொகையாவது கிடைக்கும். இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.