'சிஸ்டம் சரியில்லை' என்று ரஜினி சொல்வதற்கு முன்பே நானும் கூறியுள்ளேன்: கமல்

நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால், மற்ற அரசியல்வாதிகளை விமர்சிப்பது போன்று அவரையும் விமர்சிக்க தயங்க மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
'சிஸ்டம் சரியில்லை' என்று ரஜினி சொல்வதற்கு முன்பே நானும் கூறியுள்ளேன்: கமல்
Updated on
1 min read

நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால், மற்ற அரசியல்வாதிகளை விமர்சிப்பது போன்று அவரையும் விமர்சிக்க தயங்க மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

'சிஸ்டம் சரியில்லை' என்று நடிகர் ரஜினி சொன்னதை, பல ஆண்டுகளுக்கு முன்னரே நானும் (கமல்ஹாசன்) கூறியிருக்கிறேன். அது மீண்டும் சொல்லப்படுவது மகிழ்ச்சிதான் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொருத்தவரை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதற்குப் பதில் சொல்வது என் கடமையாகும்.

தசாவாதரம் திரைப்படம் வெளியான போது ஆதரித்தவர்கள்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விமர்சனங்களை வைக்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு சரி அல்ல.

கைது குறித்து ஆட்சேபம் இல்லை: கைதாவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அந்த கைதுக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். என்னை கைது செய்ய சொல்பவர்கள் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளின்போது மைதானத்தைச் சுற்றி நின்று கொண்டு குட்டைப் பாவாடையுடன் ஆடி மகிழ்விக்கும் சியர் கேர்ள்ஸ் மீது நடவடிக்கை கோராதது ஏன்?

இந்துத்துவா அடிப்படைவாத அமைப்புகள் என்னை எப்போதுமே தவறாக புரிந்து வைத்துள்ளன. அவர்களுக்கு நான் கம்யூனிஸ்ட்டாகத் தெரிகிறேன். ஆனால், உண்மையில் நான் ஒரு பகுத்தறிவுவாதி. இரண்டு தரப்பிலிருந்தும் தர்க்க ரீதியாக நல்ல கருத்துகள் முன்வைக்கப்பட்டால் அதை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.

என்னால் தமிழக மக்களின் உணர்வுகள் புண்படுவதாகக் கூறுகிறார்கள். அவர்கள் என்னை அச்சுறுத்தவில்லை; ஆர்வப்படுத்துகிறார்கள். அடிப்படைவாதிகளால் நான் குறி வைக்கப்படுவது இது முதன்முறையல்லவே.
கடந்த முறை விஸ்வரூபம் படத்துக்கு விமர்சனங்கள் எழுந்தன. நான் கட்டிவைத்து அடிக்கப்படுபவன். ஒவ்வொரு முறையும் தோலுரித்து புதிதாக தோல் வளர்க்கிறேன். இப்படி ஒவ்வொரு முறையும் விளக்கம் அளித்துக் கொண்டிருக்க முடியாது.

கிரிக்கெட் போன்று பிக்பாஸ் தேவைதான்: என்னை நோக்கி கேமரா திரும்பாதா என்று எண்ணிய நாள்களில் இருந்து பேசிக் கொண்டே இருக்கிறேன். மக்களின் மீதும், சமூகத்தின் மீதும் எனக்கு இருக்கும் அக்கறை இப்போது வந்ததில்லை. கிரிக்கெட் போட்டி எந்த அளவுக்கு தேவையோ, அதேபோல் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளும் தேவைதான். எந்த ரூபமாக இருந்தாலும் என்னை நம்பும் மக்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

ஜி.எஸ்.டி. பிரச்னையில் நான் சொன்ன கருத்துக்கள் வேறு மாதிரியாக மக்களைச் சென்றடைந்து விட்டன. நடிகை பாவனா விவகாரத்தில் கேரள அரசு தனது கடமையை சரியாக செய்துள்ளது என்றார் நடிகர் கமல்ஹாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com