சென்னை: தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் 'அம்மா இ.கிராமம்' என்னும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று 110-ஆவது விதியின் கீழ் தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு 'அம்மா இ.கிராமம் திட்டம்' செயல்படுத்தப்படும். அந்த கிராமங்களில் கம்பியில்லா வைஃபை பகிரும் வசதி மற்றும் திறன்மிகு ஸ்மார்ட் தெரு விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும்.
அத்துடன் இந்த கிராமங்களில் தொலை கல்வி மற்றும் தொலை மருத்துவ சேவைகளும் ‘அம்மா இ. கிராமம்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
அதேபோல கிராமப்புற உள்ளாட்சி பகுதிகளை ஆப்டிகல் பைபர் கேபிளின் மூலம் இணைக்கும் திட்டத்திற்கான புரிந்துணரவு ஒப்பந்தமானது, கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்தானதினை சுட்டிக்காட்டிய முதலவர், தற்பொழுது இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளும் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார். அத்துடன் இந்த திட்டத்திற்கு 'தமிழ் நெட்' எனப் பெயரிடப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.