முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டால் அதனைச் சந்திக்கத் தயார் என்று அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான மக்கள் நேசிக்கும் நபர் என்பதால் அவரது சிகிச்சையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உள்ள நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் பேரில் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், தீவிர நோய்த்தொற்றும், மாரடைப்பும் ஏற்படாமல் இருந்திருந்தால் ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.
எங்களால் இயன்ற அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வந்தோம். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பயளனிக்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. எனவே, விசாரணைக் கமிஷன் அமைத்தால் அதனைச் சந்திக்கத் தயாராகவே உள்ளோம். மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் யாருடைய தலையீடும் இல்லை. ஆனால், சிகிச்சை அளிப்பதற்கு சில மருத்துவர்களின் பெயர்களைப் பரிந்துரைத்தனர். அந்த மருத்துவர்களிடமும் ஆலோசனை கேட்கப்பட்டது.