சென்னை: அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் உறவினரான பாஸ்கரன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் அண்ணன் மகன் பாஸ்கரன். சென்னை நீலாங்கரையில் வசித்து வரும் இவர் திரைத்துறையில் நடிக்க ஆர்வம் காட்டுவதுடன், அது தொடர்பான இதர பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாஸ்கரன் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட குழு ஒன்று அவர் மீது புகார் அளித்துள்ளது. அதில் அரசு வேலை மற்றும் அதிமுக கட்சியில் முக்கிய பொறுப்பு வாங்கித் தருவதாக கூறி, தங்களிடம் இருந்து ரூ.7 கோடியை பாஸ்கரன் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சொன்னபடி எதுவும் நடக்காததால், தாங்கள் கொடுத்த பணத்தை திரும்பத் தருமாறு கேட்டு, அவரது நீலாங்கரை இல்லத்தை அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தற்பொழுது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.