/

சென்னை அயனாவரம் போக்குவரத்து பணிமனை கேண்டீனில் பிளாஸ்டிக் அரிசி? அதிகாரிகள் ஆய்வு! 

சென்னை அயனாவரம் போக்குவரத்து பணிமனை கேண்டீனில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதற்காக எழுந்த புகாரை அடுத்து...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:42 pm

DIN

சென்னை: சென்னை அயனாவரம் போக்குவரத்து பணிமனை கேண்டீனில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதற்காக எழுந்த புகாரை அடுத்து, அங்கு போக்குவரத்து துறை மற்றும் உணவு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்தனர்.

சில நாட்களுக்கு முன்பாக தெலுங்கானா மாநிலத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது நாடு முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் எங்கும் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், அவ்வாறு யாராவது விற்பனை செய்வது தெரிந்தால்,கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை அயனாவரம் போக்குவரத்து பணிமனை கேண்டீனில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக, இன்று அங்கு மதிய உணவு சாப்பிட்ட   போக்குவரத்து துறை ஊழியர்கள் சிலர் புகார் செய்தனர். ஊழியர்களின் புகாரினைத் தொடர்ந்து, மாநகராட்சி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து சென்று நேரடி ஆய்வு நடத்தினர்.

சமைக்கப்பட்டு வைக்கபட்டிருந்த உணவு மற்றும் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் ஏதேனும் தவறு நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.