திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை காலை மலேசியா சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, மலேசியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டார்.
இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தி:
மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பினாங்கில் சனிக்கிழமை (ஜூன் 10) காலை நடைபெறுகிறது. இதில், பங்கேற்க வந்த அழைப்பை ஏற்று, மலேசியா செல்வதற்காக சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் விசா கேட்டு வைகோ விண்ணப்பித்தார்.
அவருக்கு கடந்த வாரம் விசா வழங்கப்பட்டது. வியாழக்கிழமை நள்ளிரவு 11.55 மணிக்கு தனது செயலாளர் அருணகிரியுடன் வைகோ மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
கோலாலம்பூர் விமானநிலையத்தை வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அவர்கள் சென்றடைந்தனர். அப்போது, விமான நிலையத்தில் இருந்த குடிவரவு அதிகாரிகள், வைகோவை விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் எனக் கூறியதோடு, இலங்கையில் அவர் மீது பல வழக்குகள் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். மேலும், மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் வைகோ பெயர் இருக்கிறது என்று கூறி, மலேசியாவுக்குள் அனுமதிக்க முடியாது எனத் தடை விதித்துள்ளனர். மேலும், அவருடைய கடவுச் சீட்டையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தத் தகவலை அறிந்த துணை முதல்வர் ராமசாமி, விமான நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டபோதும், வைகோவை அனுமதிக்க மறுத்துள்ளனர். மேலும், குடிவரவு அலுவலகத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைகோவை அமர வைத்து, அந்த இடத்தை விட்டு நகரக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். இதனால் உணவு அருந்த வைகோ மறுத்துள்ளார். பின்னர், அவரை இந்தியாவுக்கு மலேசிய அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்.