சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணா மகளான தீபா, தன்னுடைய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, தற்பொழுது அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் தனது இல்லத்தில் அளித்த பேட்டி விபரம் வருமாறு:
எனது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தற்பொழுது அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.என் மீது சிலரால் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது.
அதிமுகவுக்கு உரிமை கோருவது தொடர்பாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் எங்களுக்கு திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்கியுள்ளது. அதிமுக தற்போது தலைமை இல்லாமல் சிதறிக் கிடக்கிறது. ஒரு மாபெரும் கட்சிக்கு தொண்டர்களின் பலம்தான் அவசியம். சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் தொண்டர்கள் பலம் எங்களிடம்தான் உள்ளது.
இவ்வாறு தீபா தெரிவித்தார்.