நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு மதித்துச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், காவிரி ஆற்றிலிருந்து இவ்வளவு தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், கர்நாடக அரசு உரிய தண்ணீரை திறந்துவிட மறுக்கிறது.
இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த உத்தரவில் மாற்றமில்லை என்று கூறியது.
ஆனால், இந்த உத்தரவை ஏற்க முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, உச் சநீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் முயற்சிக்கு தடைவிதிக்க, தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.