ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்திபவனில் அவர், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதைக் கண்டித்து மக்கள் மீண்டும் போராடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸின் ஆதரவு உண்டு.
தமிழக அரசு ஒருபுறம் மக்களுக்கு ஆதரவாக பேசிவிட்டு, மறுபுறம் மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மார்ச் 30 -ஆம் தேதி சந்தித்துப் பேச உள்ளேன்.
எல்லாத் தேர்தல்களிலும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. பணம் கொடுத்துத்தான் ஜெயிக்க முடியும் என்ற அவலநிலை தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையம்தான் கட்டுப்படுத்த வேண்டும். வாக்குக்குப் பணம் வாங்குவதை வாக்காளர்களும் கைவிட வேண்டும். தமிழகத்தில் ஆர்.கே.நகரில் மட்டும்தான் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஒரு தொகுதியில்கூட வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைக் தடுக்க முடியாவிட்டால் தேர்தல் ஆணையம் இருந்து என்ன பயன்? தேர்தலை முறையாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.