'வாட்ஸ் ஆப்' மூலம் வதந்தி பரப்பினால் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை
கட்-செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தகவல்களைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் கரண் சின்கா தெரிவித்தார்.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் செல்லிடப்பேசி சேவை நிறுவன அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் 7 தனியார் செல்லிடப்பேசி சேவை நிறுவன அதிகாரிகள், பி.எஸ்.என்.எல். நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர். காவல் ஆணையர் கரண்சின்கா தலைமை வகித்தார்.
விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் தகுந்த அடையாள அட்டை ஆவணங்கள் பெறாமல் சிம்கார்டு விற்பனை செய்யக் கூடாது, மீறி விற்பனை செய்யும் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
சிம்கார்டு விற்பனை உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து அடிக்கடி சோதனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
செல்லிடப்பேசியின் ஐ.எம்.இ.ஐ. எண்களை திருட்டுத்தனமாகப் பதிவேற்றம் செய்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2012-ஆம் ஆண்டு முதல் தொடரப்பட்ட சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் மீது நீதிமன்றத்தில் விரைவாக தண்டனை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதில் ஆணையர் கரண் சின்கா பேசியது: அரசால் தடை செய்யப்பட்ட குற்றச் செயல்களில் பொதுமக்களை ஈடுபட வைக்கும் வகையில் செல்லிடப்பேசிகளுக்கு மொத்தமாக குறுஞ்செய்திகளை அனுப்புவோர் கண்காணிக்கப்படுவார்கள். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில், உண்மைக்குப் புறம்பான செய்திகளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) மூலம் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.