புதுதில்லி: பிரதமருடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என்று பிரம்மர் மோடியை சந்தித்த பின்பு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவரான பன்னீர்செல்வம் இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பன்னீர் செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் கிராமம் முதல் மாநகரம் வரை எல்லா இடங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது ஆடு மாடுகள் கூட குடிக்க நீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் வகையில் போதுமான அளவு குடிநீர் திட்டங்களை உருவாக்க மத்திய அரசு தமிழக அரசுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன்.
மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், வங்கிகளிடம் பெற்றுள்ள கடுமையான கடன் சுமையாலும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் வாங்கியுள்ள விவசாய கடன்களை தள்ளுப்படி செய்ய வேண்டும். அத்துடன் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
சேலம் உருக்காலையின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தனியார் மயத்தை தவிர்க்க வேண்டும், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்க வழி வகை செய்யும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஆற்று நீர் பங்கீடு வழிகாட்டுக் குழு அமைக்க ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் முன் வைத்தேன். எனது கோரிக்கைகளை பொறுமையாக கேட்டுக் கொண்ட பிரதமர், கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்
இவ்வாறு பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து பிரதமரிடம் ஏதேனும் பேசப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பன்னீர் செல்வம், 'மக்கள் நலனுக்காக மட்டுமே பிரதமரை சந்தித்ததாகவும், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.