சென்னை: தனியார் பாலில் ரசாயன கலப்பு நடைபெறும் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளதாக, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சில தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்யும் பாலில் ரசாயனங்களை கலப்பதாகவும், அதன்மூலம் அதனை பருகுவோருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் தெரிவித்திருந்தார்.
அத்துடன் மாவட்ட அளவில் நிறுவனங்களை ஆய்வு செய்யும் பணி விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.அமைச்சரது குற்றச்சாட்டினை பால் நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்தன.எனவே பாலில் ரசாயன கலப்பு இல்லை என்று நிரூபணமானால் தான் தூக்கில் தொங்குவதாக அமைச்சர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலவர் பழனிசாமியை,அமைச்சர் ராஜேந்தர பாலாஜி இன்று மதியம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
தனியார் பாலில் ரசாயன கலப்பு நடைபெறும் விவகாரம் தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடந்தது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் எந்த விதமான பாரபட்சமும் காட்டக் கூடாது எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.