டி.டி.வி. தினகரன், மல்லிகார்ஜுனா ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு

'இரட்டை இலை' சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி தில்லி காவல் துறை தொடுத்த வழக்கில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா கட்சி
Published on
Updated on
1 min read

'இரட்டை இலை' சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி தில்லி காவல் துறை தொடுத்த வழக்கில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை வியாழக்கிழமைக்கு (ஜூன் 1) தில்லி நீதிமன்றம் தள்ளிவைத்தது.
இது தொடர்பான ஜாமீன் மனுக்கள் தீஸ் ஹசாரி நீதிமன்ற சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'நீதிமன்றத்தின் சுருக்கெழுத்தாளர் (ஸ்டெனோகிராபர்) விடுமுறையில் உள்ளார். அதனால், உத்தரவை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவு வியாழக்கிழமை பிறப்பிக்கப்படும்' என்று குறிப்பிட்டார்.
பின்னணி: 'இரட்டை இலை' சின்னத்தை சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு சாதகமாக பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா, நரேஷ் ஆகியோரை தில்லி காவல் துறை குற்றப்பிரிவு தனிப்படையினர் கடந்த ஏப்ரலில் கைது செய்தனர். போலீஸ் காவல் முடிவடைந்து அனைவரும் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கக் கோரி சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த மனுவை தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் ஜாமீன் கோரி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com