

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்தில் அடுத்த இரு நாள்களுக்கு மழை நீடிக்கும்.
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (நவ.2) கூறியது: இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதையொட்டி வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
மழை நீடிக்கும்: அடுத்துவரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை இருக்கும். புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழை இருக்கும். தற்போதைய நிலையில், இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும். சென்னையைப் பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மீனவர்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே பகுதியில் இரு நாள்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், செங்கல்பட்டு, பூந்தமல்லி பகுதிகளில் 40 மி.மீ. மழை பெய்துள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி அதிகபட்சமாக நெல்லை பாளையங்கோட்டையில் 130 மி.மீ. பதிவாகியுள்ளது. பிற இடங்களில் பதிவான மழை அளவு (மி.மீல்): திருச்செந்தூர்- 90, சிதம்பரம், சேரன் மகாதேவி, வேதாரண்யம்- 70, தரங்கம்பாடி, ஒட்டப்பிடாரம், காரைக்கால்- 60, பரங்கிப்பேட்டை, மகாலிங்கபுரம், சீர்காழி, ராதாபுரம்- 50.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.