சென்னை: ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரனுக்கு தொடர்புடைய இடங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, திருவாரூர், பெங்களூர், கோடநாடு என இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சோதனை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி ஃபினிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் அலுவலகம், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜெயா டிவி நிர்வாகி விவேக் வீடு, தி. நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கப் பயன்படுத்தி வந்த நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட் மற்றும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பெங்களூருவில் உள்ள டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நமது எம்ஜிஆர் அலுவலகத்திலும், ஜெயா டிவி அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் அதிகாலை முதல் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.