மதுரையில் தம்பியை கைது செய்தது தொடர்பாக காவல்நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட பெண் காவலரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மதுரை கரும்பாலை டி.பி. காலனியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர், மனைவி மாரியம்மாளுடன் அப்பகுதியில் புதன்கிழமை நடந்து சென்றுள்ளார். அப்போது கரும்பாலை நடுத்தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி(23),
கிடாமணி(23) ஆகிய இருவரும், இவர்களை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளனர். பாண்டியராஜன் பணம் தர மறுத்ததால் அவரை மிரட்டி ரூ.350-ஐ பறித்துச் சென்றனர். சம்பவம் தொடர்பாக மாரியம்மாள் அளித்தப் புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் கரும்பாலை பகுதியில் இருந்த முத்துப்பாண்டி, கிடாமணி ஆகிய இருவரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது முத்துபாண்டியின் சகோதரியான, சென்னை மவுண்ட் ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் கவிதா(26) அண்ணாநகர் காவல்நிலையத்துக்குச் சென்று தனது தம்பியை பிடித்து வந்தது தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்ததாக தலைமை காவலர் பெரிய அடைக்கண் அளித்தப் புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பெண் காவலர் கவிதாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.