போராட்டம் அறிவித்த புதிய தமிழகம் கட்சி: புதுமையாக பதிலளித்த பால பாரதி

பாலபாரதி வீட்டையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததற்கு பாலபாரதி பதிலளித்துள்ளார்.
போராட்டம் அறிவித்த புதிய தமிழகம் கட்சி: புதுமையாக பதிலளித்த பால பாரதி
Published on
Updated on
2 min read


திண்டுக்கல்: பாலபாரதி வீட்டையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததற்கு பாலபாரதி பதிலளித்துள்ளார்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு மருத்துவ சீட்டு கிடைத்தது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்ட முன்னாள் எம்எல்ஏ பால பாரதியின் வீட்டையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்தனர்.

இதற்கு தனது பேஸ்புக்கில் பதிலளித்த பால பாரதி, இன்று எங்களது இயக்கத்தின் மாவட்ட அலுவலகத்தையும், வீட்டிற்கு முன்னாலும் புதிய தமிழகம் கலகம் செய்யப் போவதாக அறிவிப்பு செய்துள்ளார்கள்.
பொய் கலகம் செய்யும்.
உண்மை புரட்சி செய்யும்.
# வர்ர்லாம் வர்லாம்...  என்று பதிவிட்டுள்ளார்.

வீட்டை முற்றுகையிடுவோம் என்ற மிரட்டலுக்கு வரலாம் என்று பதிலளித்துள்ள பால பாரதியின் பதில் சமூக வலைத்தளத்தில் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரிலேயே மருத்துவச் சீட்டு கிடைத்ததாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பால பாரதி தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. 

இது குறித்து சட்டப்பேரவையில் நடந்த ஒரு உரையாடலை அவர் பதிவிட்டிருந்தார்.

அதில், 
சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.

அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப்பார்த்து வணக்கம்போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடு என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள.. டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜையில் அமர்ந்து சிரித்தது.

இப்படி புறவாசல்வழியாக உதவியைப்பெற்றுக்கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருகிறார். தோழர் பிரின்சு, எம்எல்ஏ சிவசங்கர் மீது குற்றம் சுமத்துகிறார், பாஜக, அதிமுக வேடிக்கை பார்க்கிறார்கள். ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம். கேப்பையில நெய்வடியுதாம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவைத் தொடர்ந்து, அவருக்கு சிலர் மிரட்டல் விடுக்கப்பட்டது. அது குறித்து மேலும் ஒரு பதிவை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டார்.

அதாவது, "டாக்டர் கிருஷ்ணசாமி குறித்த என் பதிவை நான் நீக்கிவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. வானமே இடிந்து விழுந்தாலும் நீக்கமாட்டேன்.

உள்ளே இருக்கும் உளவுத்துறைக்கும் மற்றவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். கிருஷ்ணசாமியை அடக்கி வாசிக்கச்சொல்லுங்கள்..." என்று பதிவிட்டிருந்தார்.

இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணசாமி, அந்த பொம்பளைய நான் சட்டப்பேரவையில் பார்த்ததே இல்லையே என்று பதிலளித்திருந்தார்.

ஒரு தலித் மாணவி, கடும் போராட்டத்துக்குப் பின் தனது மருத்துவர் கனவு கலைந்ததால், மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையால் தமிழகமே அமைதி இழந்தது. ஆனால், அவரது மரணத்துக்குப் பின்னால் சிலர் இருப்பதாக, அரசியல் ரீதியான கருத்துகளைக் கூறியதால், கிருஷ்ணசாமிக்கு எதிராக சமூக தளங்களில் ஏராளமானோர் கடும் விமரிசனத்தை பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில், எளிமைக்கு உதாரணமாகக் கூறப்படும் முன்னாள் எம்எல்ஏ பால பாரதி, குறைந்த மதிப்பெண் எடுத்த  தன் மகளுக்கு முதல்வரின் சிபாரிசின் பேரில் மருத்துவ சீட்டு வாங்கிய கிருஷ்ணசாமி குறித்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பது, அவருக்கு எதிராக மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com