சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் பயப்படுகிறாரா என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் இரு அணிகளாக இருந்து செயல்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியஇருவரும் சமீபத்தில் ஒன்றாக இணைந்தனர். உடனே அதிமுக அம்மா அணியின் துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 19 பேர் ஒன்றிணைந்து,முதல்வர் பழனிசாமி மீது தாங்கள் நம்பிக்கையிழந்து விட்டதாக கூறி ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் கடிதம் குடுத்தனர்.
ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான ஸ்டாலின் நேற்று கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து சென்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவினை சந்தித்தார். ஆளுநரிடம் ஒரு கடிதத்தினையும் அவர் அளித்தார்.
அதில் அவர் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவினை இழந்து விட்ட எடப்பாடி பழனிசாமி அரசினை சட்டப்பேரவையினைக் கூட்டி உடனடியாக பெரும்பான்மையினை நிறைவேற்றச் சொல்ல வேண்டும், ஒருவாரத்திற்குள் அவ்வாறு நிகழா விட்டால், முதலில் நீதிமன்றத்தினையும்,அதன் பிறகு மக்கள் மன்றத்தினையம் அணுகி நீதி பெறுவோம்.
இவ்வாறு ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், 'ஸ்டாலின் ஏன் ஆளுநரை சந்தித்து அவருக்கு வெற்று மிரட்டல்கள் விடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக ஸ்டாலின் ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கூடாது? ஏன் பயப்படுகிறார்?
இவ்வாறு ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.