சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் பற்றி, பின்னர் முறையாக தகவல் வெளியிடப்படுமென்று நிறுவனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக தற்பொழுது வித விதமான தகவல்கள் பரவி வருகின்றன. முதலில் சிகிச்சையின் பொழுது ஜெயலலிதா தொடர்பாக நாங்கள் கூறிய தகவல்கள் எல்லாம் பொய் என்று மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டம் ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் அது தொடர்பாக ஒவ்வொரு அமைச்சரிடம் இருந்தும் மாறுபட்ட தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் சிகிச்சையின் பொழுது ஜெயலலிதாவை அவரது தோழி சசிகலா வீடியோ எடுத்தார் என்று டிடிவி தினகரன் தெரிவித்து பரப்பரப்பைக் கிளப்பினார்.
தொடர்ந்து சர்ச்சைகள் வலுத்து வரும் நிலையில் அப்பொழுது போயஸ் கார்டன் இல்லம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கயில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட வேண்டுமென்று பரவலாக கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அதன் நிறுவனர் பிரதாப் ரெட்டியிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர், 'ஜெயலலதாவுக்கு எங்களால் இயன்ற வரை 100% சிறப்பான உயர்தர சிகிச்சை அளித்தோம். அவருக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் பற்றி, பின்னர் முறையாக தகவல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஹரிப்ரசாத், 'சிகிச்சை தொடர்பாக நடக்கும் எந்த விதமான விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.