

அதிமுக அணிகள் இணையாவிட்டால் பல ரகசியங்களை வெளியிட வேண்டிய நிலை ஏற்படும் என்று கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கோவையில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அதிமுகவில் அணிகள் என்று எதுவும் கிடையாது. எனினும் கருத்து வேறுபாடுகளால் மட்டுமே பிரிந்துள்ளோம். அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பிரச்னைகளைப் பேசித் தீர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தபோது அவரைக் கூடவே இருந்து கவனித்து வந்தவர் சசிகலா. அப்போது அவர் சிசிச்சை பெற்று வரும் புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று சசிகலாவிடம் தெரிவித்தேன். ஆனால், ஜெயலலிதாவின் மதிப்பைப் பாதுகாக்கவே அவர் புகைப்படங்களை வெளியிட மறுத்துவிட்டார்.
ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கில் கூட்டுச் சதி என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்குக்காக சசிகலா சில காலம் விலக்கி வைக்கப்பட்டிருந்தார். சசிகலாவிடம் கட்சிப் பதவிக்காக சென்று நிற்காதவர் என எவருமே கிடையாது.
அவரால் பதவிக்கு வந்தவர்களே தற்போது அதிகமாக உள்ளனர். ஜெயலலிதா இருந்தபோதும் கூட கட்சியின் முக்கிய முடிவுகளை எடுத்தவர் அவர்தான். அதிமுகவில் கூட்டணிகளைக் கூட இறுதி செய்தது சசிகலாதான். அதேபோல கட்சிக்காக சிறை சென்றவர்தான் தினகரன். எனவே, அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால், எங்களை ஒதுக்கி வைத்து விட்டு சிலர் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக அணிகள் ஒன்றிணையாவிட்டால் எனக்குத் தெரிந்த பல கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.