அனிதாவின் உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்பு
நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடல் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம், குழுமூரில் சனிக்கிழமை இரவு தகனம் செய்யப்பட்டது.
அரியலூர் மாணவி அனிதா, நீட் தேர்வினால் மருத்துவம் படிக்க முடியவில்லையே என விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் வீட்டின் அருகேயுள்ள திடலில் வைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தியதையடுத்து சனிக்கிழமை இரவு 10.40 மணிக்கு திருச்சி சரக டிஐஜி பவானிஸ்வரி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்குமார் ஆகியோர் தலைமையிலான அதிவிரைவுப்படை போலீஸார் பாதுகாப்புடன், மயானத்துக்கு அனிதாவின் உடல் ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு 11.30 மணியளவில் எரியூட்டப்பட்டது.
வழிநெடுகிலும் பொதுமக்களும், மாணவர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்லவத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.