புதுவை தமிழ்ப் புலவர்களில் ஒருவரும், எழுத்தாளருமான அரிமதி தென்னகன் (84) புதுச்சேரியில் செப்.12ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலமானார்.
தமிழாசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அரிமதி தென்னகன், நாமதேவன் என்னும் இயற்பெயர் கொண்டவர். பாட்டு, காவியம், சிறுகதை, சிறுவர் இலக்கியம், வாழ்க்கை வரலாறு, நாடகம், உரைவரைதல் என இலக்கியத் துறைகள் அனைத்திலும் தனது அடையாளத்தை பதித்தவர். 200-க்கும் மேற்பட்ட நுôல்களை எழுதியுள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காக தமிழக, புதுவை அரசுகளிடம் இருந்து பல்வேறு பரிசுகளைப் பெற்றவர். பெரியார், அண்ணா ஆகியோரிடம் நெருங்கிய ஈடுபாடு கொண்டிருந்தார். அண்ணாவின் திராவிட நாடு, காஞ்சி ஆகிய ஏடுகளில் தொடர்ச்சியாக பல்வேறு படைப்புகளை எழுதிய பெருமைக்குரியவர் அரிமதி தென்னகன்.
இரங்கல்: குறள் நெறிமன்றம், சிறுவர் இலக்கியச் சிறகம் போன்ற இலக்கிய அமைப்புகளை அமைத்துத் தமிழ்ப் பணியாற்றிய தமிழ்மாமணி அரிமதி தென்னகன் மறைவு புதுவை மாநிலத்துக்கு பேரிழப்பு என தனித் தமிழ் இயக்க நிர்வாகி கா.தமிழ்மல்லன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேபோல, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் கோ.சுகுமாரன் உள்படப் பல்வேறு தமிழறிஞர்களும், அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.