சென்னை: ஒரு தந்தையாக ஆசிபாவை பாதுகாக்கத் தவறிவிட்டேன் என்று பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமியின் மரணம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் நாடோடி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிபா பாஜக பிரமுகர்கள் மற்றும் காவல் துறையினரால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரமானது நாடு முழுவதும் கடுமையான அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது
இந்நிலையில் ஒரு தந்தையாக ஆசிபாவை பாதுகாக்கத் தவறிவிட்டேன் என்று பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமியின் மரணம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
சிறுமி ஆசிபாவுக்கு நிகழ்ந்துள்ள கொடூரம் உங்களுக்கு புரிய வேண்டுமெனில் அவள் உங்களது மகளாகத்தான் இருக்க வேண்டுமா? அவள் என்னுடைய மகளாக இருந்திருக்கலாம். ஒரு மனிதனாக எனக்கு கடும் கோபம் வருகிறது. ஒரு தந்தையாக, ஒரு குடிமகனான ஆசிபாவை பாதுகாக்கத் தவறிவிட்டேன். என்னை மன்னித்துவிடு குழந்தையே, உனக்கான பாதுகாப்பான ஒரு நாட்டை நாங்கள் உருவாக்கத் தவறிவிட்டோம். எதிர்காலத்தில் உன்னைப்போல வேறு யாருக்கும் இத்தகைய கொடூரம் நடந்து விடக்கூடாது என்பதற்காக நான் போராடுவேன். நாங்கள் உனக்காக வருந்துகிறோம்; உன்னை மறக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.