
சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் பரபரப்பாக மாறிவரும் நிலையில், சென்னையில் செவ்வாய் மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் கலை - அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சிலரின் பாலியல் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று தமது மாணவிகளைக் கட்டாயப்படுத்தும் குரல் பதிவு திங்கள் மாலை சமூக ஊடகங்களில் வெளியானது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்த தகவல் வெளியானதும் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை உத்தரவிட்டார். பின்னர் நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதேசமயம் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்று தெரிவித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கும் திங்களன்று உத்தரவிட்டுள்ளார்.
கடுமையான தாமதத்தின் பின்னால் நிர்மலா தேவி காவல்துறையால் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் பலமணி நேரமாக உட்புறமாக பூட்டிக்கொண்டு இருந்த அவரை, காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து கைது செய்தனர்
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் பரபரப்பாக மாறிவரும் இந்நிலையில், சென்னையில் செவ்வாய் மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள 'தர்பார் மண்டபத்தில்' இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக்கியமான ஊடகங்களனைத்திற்கும் இந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.