பேராசிரியர் நிர்மலாதேவியின் பின்னணியில் உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகள் யார் யார்? விஜயகாந்த் கேள்வி! 

அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவியின் பின்னணியில் உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகள் யார் யார் என்பது கண்டறியப்பட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேராசிரியர் நிர்மலாதேவியின் பின்னணியில் உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகள் யார் யார்? விஜயகாந்த் கேள்வி! 

சென்னை: அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவியின் பின்னணியில் உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகள் யார் யார் என்பது கண்டறியப்பட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு செலுத்த முயன்ற விவகாரம் தொடர்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றின் மூலமாக கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் தேவாங்கர் கலை கல்லூரியின் துணை பேராசிரியை நிர்மலாதேவி அதே கல்லூரியில் படிக்கும் மாணவிகளை தவறான வழிக்கு செல்பேசி மூலம் அழைத்து இருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த நிகழ்வு உலகளவில் தமிழர்களின் தன்மானத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் வரை சரியாக வழிநடத்த வேண்டிய ஆசிரியர்கள் இதுபோன்ற தவறான பாதைக்கு மாணவிகளை அழைத்துச் செல்வது “வேலியே பயிரை மேய்வது போன்று உள்ளது.

ஒரு பேராசிரியர் இவ்வளவு தைரியமாக செயல்பட்டிருக்கின்றார் என்றால் அரசியல்வாதிகள், உயரதிகாரிகளின் பின்னணியில் நிச்சயம் இருக்கின்றார்கள் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக ஆளுநர் தாமாக முன்வந்து பத்திரிக்கையார்களை சந்தித்து நிர்மலாதேவியை நான் பார்த்ததில்லை என்று கூறுவது “எங்கப்பன் குதிருக்குள்” இல்லை என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தனக்கு 78 வயதாகிறது என்றும், பேரன், பேத்திகள், கொள்ளுபேரன்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் தன்னிலை விளக்கம் அளித்தது எல்லோருக்கும் சந்தேகத்தையும், எண்ணற்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் மூத்த குடிமகனாக இருக்கின்ற ஆளுநர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலேயே ஒரு பெண் நிரூபரின் கன்னத்தை தொட்டது அநாகரிகத்தின் உச்சகட்டம். எந்தவொரு பயமுமின்றி நள்ளிரவு நேரத்தில் கூட ஒரு பெண் தனியாக செல்லுகின்ற நிலை வரும்பொழுதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.

ஆனால், இங்கு சிறுமிகள் முதல், மாணவிகள், குடும்பப் பெண்கள் என வயது வித்தியாசம் பார்க்காமல் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவது இந்தியா முழுவதும் தொடர் கதையாக உள்ளது. இதுபோன்ற மாபாதக செயல்களை தடுத்து நிறுத்த சட்டங்கள் மூலம் கடும் தண்டனைகளை வழங்கவேண்டும். பேராசிரியை நிர்மலா தேவியின் கைதும், அவருக்கு கிடைக்ககூடிய தண்டனையும் எதிர்காலத்தில் யாரும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற பயத்தை அனைவருக்கும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்.

மேலும் இந்த பிரச்சனையில் மத்திய அரசின் ஆதரவில் இருக்கின்ற தமிழக ஆளுநர் சந்தேக வளையத்திற்குள் இருப்பதால், சிபிஐ கூட இதை நேர்மையாக விசாரிக்குமா என்கிற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றது. ஆகவே நிர்மலாதேவி இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தாரா, அவரின் பின்னணியில் உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகள் போன்ற சக்திவாய்ந்த, அதிகாரமிக்க நபர்கள் யார், யார் என்பதை கண்டறிய, நீதிமன்றமே தானாக முன்வந்து தனது நேரடி கண்காணிப்பில் மிக நேர்மையான அதிகாரிகளை கொண்ட விசாரணை குழுவை அமைத்து, உண்மைகளை கண்டறிந்து இந்நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்தால்தான், பெற்றோர்கள் அச்சமின்றி தனது பெண்பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிகளுக்கு தைரியமாக அனுப்பக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com