முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய கலந்தாய்வு, திருத்தப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண்ணின் அடிப்படையில் நடைபெற உள்ளதால், தகுதி வாய்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வின் தகுதி மதிப்பெண் சதமானம் (Percentile) 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலானோர் முதுநிலைப் படிப்புகளில் சேர முடியும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அண்மையில் அறிவித்தார்.
இதனையடுத்து திருத்தப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: மத்திய சுகாதாரத் துறையுடனான ஆலோசனைக்குப் பிறகு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெணை மத்திய தேர்வு வாரியம் திருத்தியமைத்துள்ளது. எனவே, திருத்தப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற தகுதியுள்ள தேர்வர்கள், இறுதிகட்ட கலந்தாய்வுக்காக தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம். புதிதாக பதிவு செய்வோர் அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்கள் https://mcc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.