
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு மாநில மற்றும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன. குறிப்பாக முன்னாள் பிரதமர் தேவே கௌடா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, பிரஃபுல் படேல், ஃபரூக் அப்துல்லா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கி.வீரமணி, வைகோ, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக பொருளாளர் துரைமுருகன் பேசுகையில்,
கருணாநிதியை தவிர்த்து விட்டு திராவிட இயக்க வரலாற்றை யாராலும் எழுத முடியாது. அகில இந்திய அளவில் புகழ் பெற்றவர். இந்திய அரசியல் அரங்கில் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு மூல காரணமாக இருந்தவர். குமரி முனையில் நின்று இமயத்தைத் தொட்டுப் பார்த்தவர். அவர் சிறந்த அறிவாளி, வசனகர்த்தா, மெய்மறக்கச் செய்யும் வகையில் பேச்சாற்றல் படைத்தவர். வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்ற பொருளாதாரக் கொள்கையை அறிவித்தவர். சிறந்த நிர்வாகி, 50 ஆண்டுகள் திமுகவை திறம்படக் கட்டிக் காத்தவர் என்றார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இரங்கல் தெரிவிக்கப்பட்ட வரலாறு கருணாநிதிக்கு உள்ளது. எமர்ஜென்சி காலத்தில் திமுகவின் பங்கு அளப்பரியது என்றார்.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பல்துறை வித்தகர். நவீன தமிழகம், இந்தியா உருவாக பாடுபட்டவர். திமுக மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டது. அண்ணா, கருணாநிதி வழியை பின்பற்றுகிறார் ஸ்டாலின் என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பேசுகையில், மொழி மீது அதிகம் பற்று கொண்டவர் கருணாநிதி. உறுதியான மாநிலமாக தமிழகத்தை உருவாக்க கடுமையாக பாடுபட்டவர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சார்பாக கருணாநிதி நினைவேந்தலில் பங்கேற்றுள்ளேன் என்றார்.
தமிழக வளர்ச்சிக்காக கருணாநிதி மேற்கொண்ட பணிகளுக்கு தலை வணங்குகிறேன். கருணாநிதியின் மரபும், வாழ்க்கையும் அனைவருக்கும் ஒரு உதாரணம் என்று ஆம் ஆத்மியின் சோம்நாத் பாரதி தெரிவித்தார்.
இந்தியாவின் எதிர்காலத்தை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம் இணைந்து முடிவு செய்ய வேண்டும். மாநில கட்சிகள் இணைந்து தில்லியைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு நாங்கள் தயார், நீங்கள் தயாரா? என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கலந்துகொண்ட டெரீக் ஓ ப்ரைன் கேள்வியெழுப்பினார்.
தெலுங்கு தேசம் எம்.பி. ஒய்.எஸ்.சவுத்ரி பேசும் போது, பன்முக திறமை கொண்டவர் கருணாநிதி. அவரது இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







