வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களாகவே உடல்நலப் பிரச்னைகளால் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஜூலை மாதம் 7-ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், அங்கேயே ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதன்பிறகு, அவர் கடந்த 20-ஆம் தேதி மீண்டும் சென்னைக்கு திரும்பினார்.
சென்னை திரும்பியவுடன் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவர் அஞ்சலி செலுத்தும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், மனைவி பிரேமலதாவும், உறவினர் சுதீஷும் இருபுறம் பிடிக்க அவர்கள் உதவியுடன் தான் விஜயகாந்த் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த காட்சி அவருடைய தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக, சுதீஷ் தெரிவிக்கையில், "விஜயகாந்த் நலமுடன் உள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் உள்ளார். அதனால், வதந்திகளை நம்பவேண்டாம்" என்றார்.