மதுரையில் "எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் தமிழக அரசு செய்ய வேண்டிய உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான அரசாணைக்காக மாவட்ட நிர்வாகம் காத்திருக்கிறது.
தமிழகத்தில் "எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வேண்டும் என 2014-இல் மத்திய அரசுக்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதன் பிறகு நீண்ட இழுபறிக்கு பிறகு நீதிமன்றம் வரை சென்ற பின்னர் ஒருவழியாக கடந்த ஜூன் 18 ஆம் தேதி புதுதில்லியில் நடந்த மத்திய சுகாதாரத் துறையின் ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை தோப்பூரில் "எய்ம்ஸ்' மருத்துவமனையை அமைக்க முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
அப்போது, 5 நிபந்தனைகளை தமிழக அரசு நிறைவேற்றி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. "எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் இடத்தில் நான்கு வழிச் சாலை அமைத்து, அதை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும். அந்த இடத்தில் உள்ள மின்கம்பங்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். 20 மெகாவாட் மின்வசதி 2 வழித் தடங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும். போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
தோப்பூர் பகுதியில் 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைக்க வேண்டும். அந்த இடத்தின் வழியே குழாய் பதித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் தடை இல்லாச் சான்று பெற வேண்டும் என 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இவற்றை நிறைவேற்றுவதற்கான ஒப்புதலுடன் தமிழக அரசு, மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னேற்பாடாக நிலம் ஒப்படைப்பு, சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு செய்து முடிக்க வேண்டும். தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளில் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதால், அந்தந்த துறைகள் மூலமாக அரசாணைகள் பிறப்பிக்கப்பட வேண்டியது அவசியம். திட்டப் பணிகளுக்கான கருத்துரு அந்தந்த துறை செயலர்கள் மூலமாக அரசுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன.
"எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், தமிழக அரசின் திட்டப் பணிகளுக்கு அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளிக்கு மிரட்டல்: 3 போ் கைது

கங்கைகொண்டானில் மகளிருக்கான தங்கும் விடுதி திறப்பு

இளைஞா் மீது தாக்குதல்: நால்வா் மீது வழக்கு
2,700 லி. மண்ணெண்ணெய் பறிமுதல்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



