மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதின மடங்களின் சொத்து விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்னன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில் ஆக்கிரமிக்கப்பட்ட தூத்துகுடி செங்கோல் ஆதீன மடத்திற்கு சொந்தமான நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக முறையான வருமானம் இல்லாத காரணத்தினால், ஆதின நிர்வாகத்தின் கீழ்வரும் கோவில்களில் வழக்கமான பூஜைகள் கூட ஒழுங்காக நடைபெறுவது இல்லை என்பதால், விரைவான நடவடிக்கை தேவை என்றும் வேண்டுகோள் வைத்திருந்தார்.
இந்த மனுவானது வியாழன் அன்று நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம் வருமாறு:
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதின மடங்களின் சொத்து விபரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் நில விபரங்களை தமிழக பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஆய்வு செய்து, சரியான உரிமையாளர் யார் என்பதனை தெளிவு செய்ய வேண்டும். நிலங்கள் ஏதேனும் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்ப்பட்டிருந்தால் அவற்றை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.