போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை தொழிற்சங்கங்களிடமிருந்து வசூலிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, சென்னை மாங்காட்டைச் சேர்ந்த என்.ஜனார்த்தனன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஜனவரி 4 -ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வரை நடந்த இப்போராட்டத்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்துக்குக் காரணமான சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்களிடம் இருந்து அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'பணியாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையேயான பிரச்னையை பொதுநல வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது.
எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.