

சென்னை: லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆ.கணபதி (67), பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் டி.சுரேஷ் (41) என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை அதிகாரிகளால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவருடன், வேதியியல் துறை பேராசிரியர் என்.தர்மராஜூம் கைது செய்யப்பட்டார். தனது தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்வதற்காகத் துணைவேந்தர் ரூ.30 லட்சம் கேட்பதாக டி.சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் சுமார் 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரி துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பணியிடைநீக்கம் செய்து, தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.