கடலூரில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது.
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலராக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியில் ஓபிஎஸ் அணி உருவான போது, கடலூர் மாவட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக இருந்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ. கோ.ஐயப்பன் தலைமையில் ஓபிஎஸ் அணி செயல்பட்டது. மேல்மட்டத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஒருங்கிணைந்த நிலையிலும், கடலூர் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என்ற அணி மனப்பான்மையும், ஈபிஎஸ் அணிக்குள்ளேயே அமைச்சருக்கு எதிராக 3 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்களும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை கோ.ஐயப்பன் தலைமையிலானவர்கள் புறக்கணித்தனர். ஞாயிற்றுக்கிழமை கடலூர் நகர அரங்கில் தனியாகக் கூட்டத்தை நடத்தினார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை கடலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியான ரெட்டிச்சாவடியில் கோ.ஐயப்பன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஐயப்பன் வந்தபோது, அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்களான ஏழுமலை, பக்கிரி உள்ளிட்டோர் அவரை வழிமறித்து ஒன்றிய நிர்வாகிகளிடம் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.
இது புதிய உறுப்பினர் சேர்க்கைதான்; எனவே, யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று ஐயப்பன் தெரிவித்தார். இதனையடுத்து, இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென மோதிக் கொண்டனர்.
அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்களை விலக்கி விட்டனர். இதே போல, ஐயப்பன் தலைமையில் மாலை திருவந்திபுரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அப்போது, ஒன்றிய அதிமுக செயலர் ராம.பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.