

புதுச்சேரியில், பக்கோடா விற்ற காங்கிரஸாரின் போராட்டத்துக்கு பதிலடியாக, பாஜக சார்பில் அல்வா விற்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பக்கோடா விற்பனை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த வாரம் புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸார் பக்கோடா விற்பனை செய்யும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடக்கி வைத்து, அமைச்சர்கள், காங்கிரஸாருடன் சேர்ந்து பக்கோடா தயாரித்து விற்றார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸார் போராட்டம் நடத்திய புதுச்சேரி நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் பாஜகவினர் அல்வா விற்கும் போராட்டத்தை நடத்தினர். இதையொட்டி "நாராயணசாமி அல்வா கடை' என்ற பெயரில் கடையைத் திறந்து விற்பனையில் ஈடுபட்டனர்.
மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அல்வா விற்றனர்.
முதல்வர் நாராயணசாமி புதுவையில் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் மக்களுக்கு அல்வா தான் கொடுத்து வருகிறார் எனக் கூறி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம் உள்பட பாஜகவினர் பலர் பங்கேற்றனர்.
முதல்வர் நாராயணசாமி மன்னிப்பு கேட்கும் வரை பாஜக சார்பில் போராட்டங்கள் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.