சென்னை: காவிரி தீர்ப்பு தொடர்பாக வியாழன் அன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க விவசாய சங்கங்கள் உள்ளிட்ட 44 அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக விவாதிப்பதற்காக வியாழன் அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி தலைமை வகிக்க உள்ளார். நாளைய கூட்டத்தில் தீர்ப்பின் சாதக பாதக அம்சங்கள், மேல்முறையீடு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
நாளை நடைபெற உள்ள இக்கூட்டத்திற்கு விவசாயிகளையும் அழைக்க வேண்டும் என ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தன. தற்போது இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்துள்ளது.
அதன்படி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் உட்பட 44 அமைப்புகளுக்கு தமிழக அரசு தற்பொழுது அழைப்பு விடுத்துள்ளது.